கண்ணே திறக்க முடியவில்லை. இமைகள் ரெண்டுக்கும் எப்படித்தான் எடை கூடியதோ தெரியவில்லை. மதியம் வந்து படுத்தது நினைவிருக்கிறது. இப்போது மணி என்ன என்று தெரியவில்லை. இருட்டி இருக்கிறது. பத்து மணி ஆகி இருக்குமோ என்றுத் தோன்றியது. போனை எங்கு வைத்தேன் என்றுத் தெரியவில்லை. அம்மா என் அசைவைப் பார்த்து லைட்டைப் போடவும் தான் கடிகாரத்தில் மணிப் பார்த்தேன். ஏழுதான் ஆகி இருந்தது. காய்ச்சல் ஒருவாறு காலத்தை குழப்பி விடுகிறது.
சூடாக கஞ்சிக் காய்ச்சிக் கொண்டு வந்துக் கொடுத்தார்கள். மெதுவாக ஊதி ஊதிக் குடித்துக் கொண்டிருந்தேன். ஓரளவு பார்வை தெளிவானதும் போனில் நெட்டை ஆன் செய்யவும் ஏகப்பட்ட வாட்சப் மெசேஜ்கள். ரிசல்ட் வந்திருந்தது. எனக்கு ஹால் டிக்கெட்டை எடுத்துப் பார்த்து நம்பரைத் தேட சலிப்பாக இருந்தது. நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்ப படுக்கச் செல்கையில் அம்மா மாத்திரை முழுங்கி விட்டு படுக்கச் சொன்னார்கள். போன் அடித்தது. சுரேஷ் தான். மிகவும் உற்சாகமாகப் பேசினான். அவனுக்கு வேலைக் கிடைத்திருக்கும் போல. எனக்கும் பார்த்திருக்கிறான். நானும் பாசாகி விட்டேனாம்.
எனக்கு நம்பிக்கையே இல்லை. தொடர்ந்து தோல்வியை மட்டும் எதிர்கொண்டு வருபவனுக்கு வெற்றியை எப்படி எதிர்கொள்வது என்றுத் தெரியவில்லை. உண்மையில் காய்ச்சல் குறைந்தது போல இருந்தது. சலிப்பெல்லாம் பறந்துப் போய் ஹால் டிக்கெட்டை எடுத்து நம்பரைப் போட்டு நானாகப் பார்த்தேன். பாஸ் தான். சுத்தமாக காய்ச்சல் இறங்கியிருந்தது.
அடுத்த நாள் விடியற்காலையில் மாமாவைச் சென்றுப் பார்த்தேன். எங்கள் சொந்த பந்தத்தில் அரசாங்க வேலைக்குச் சென்ற ஒரே நபர் மாமாதான். எங்கள் அனைவரையும் தொடர்ந்து அரசு வேலைக்கு முயற்சிக்க சொல்லி வழிகாட்டியதும் மாமாதான். அவரிடம் மகிழ்ச்சியாக வேலைக் கிடைத்து விட்டதனைக் கூறினேன். அவர் நேற்றே ரிசல்டைப் பார்த்திருக்கிறார். என்னுடைய ஹால் டிக்கெட் ஜெராக்ஸ் காபி ஒன்று அவரிடம் இருந்தது எனக்கு நினைவில்லை.
மாமாவிற்கு ஆஸ்த்மா தொல்லை உண்டு. மப்ளரை எடுத்துச் சுற்றிக் கொண்டு கிளம்பியவர் என்னையும் உடன் அழைத்துச் சென்றார். எங்கள் ஊர் உயர் நிலைப் பள்ளிக்கு அருகே ஒரு தறிக் கொட்டகை உண்டு. அதன் மாடியில் பொருட்களை போட்டு வைக்கவென இருந்த அறைக்கு சொற்பமாக வாடகைக் கொடுத்து, அந்தப் பொருட்களை ஒழுங்குப் படுத்தி, காலி இடம் உருவாக்கி, அதற்கு முன்பு போர்டு ஒன்றினை வைத்து மாமா டியுசன் எடுத்து வருகிறார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச டியுசன்.
சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் பிள்ளைகள் நேரமாக டியுசனுக்கு வந்து படித்துக் கொண்டிருப்பார்கள். 7 – 8 டியுசன். பெரும்பாலும் கணக்குதான் நடத்துவார். தேர்வு சமயங்களில் மற்ற பாடங்களும் உண்டு. அங்கு வரும் மாணவர்களிடம் நான் அரசு வேலைப் பெற்று விட்டதைச் சொல்லி கை தட்ட வைத்தார். நன்றி சொல்லி விட்டு நான் கிளம்பி விட்டேன்.
வீட்டிற்கு வந்ததும் அப்பா எங்கே போய்விட்டு வருகிறேன் எனக் கேட்டார். சொன்னேன். மாமாவைப் பற்றி பேச்சு எடுத்தாலே அப்பா சாந்தமாகி விடுவார். அப்பாவிற்கு இலை வியாபாரம். எப்போதும் இலைக்கடையில் யாருடனாவது சண்டையிட்டுக் கொண்டே இருப்பார். ஆனால் மாமா இருந்தால் சத்தமே வராது. பயம் இல்லை. மரியாதை.
ஆரம்பத்தில் இப்படி எல்லாம் இல்லை. இப்போது ஐந்து வருடமாகத்தான். சரியாக சொல்ல வேண்டுமென்றால் மாமா வேலையை விட்டு நின்ற பிறகு. மாமா சர்வீஸ் முடிவதற்கு முன்பே வீஆர்எஸ் வாங்கிக் கொண்டு வந்து விட்டார். மாமா வேலைப் பார்த்தது நெடுஞ்சாலைத் துறை. பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகின்ற இடம். ஆனால் மாமா சம்பளத்தைத் தாண்டி ஒருபைசா வீட்டிற்கு எடுத்து வரமாட்டார்.
மாமாவிற்கு ஒரேப் பையன். எனக்கு மிகவும் இளையவன். நான் படித்த அரசுப் பள்ளியில் தான் இப்போது பத்தாவது படித்து வருகிறான். அரசு வேலையில் இருக்கும் போது, அதுவும் நெடுஞ்சாலைத் துறையில் இருந்துக் கொண்டு ஒருவர் தன் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்த்தியது அப்போது சொந்த பந்தங்களில் பெரும் பேச்சாக இருந்தது.
மாமா அப்படித்தான். தனக்கென்று ஒரு சைக்கிள் மட்டும் வைத்திருக்கும் மனிதர். சம்பளம் மட்டும் வாங்கி ஒருவழியாக வீடு மட்டும் கட்டி, அதன் கடனையும் கட்டி முடித்தார். அதுதான் அவர் செய்த பெரிய செலவு. மற்றபடி ஒரு காந்தியவாதி வாழ்க்கைதான்.
அம்மாவும் கேட்கவும் மாமாவைப் பார்த்து வந்ததைக் கூறினேன். அம்மா மீண்டும் ஒருமுறை மாமா வேலையை விட்டக் கதையைக் கூறத் தொடங்கினார். தர்மராசா இந்திரபிரஸ்தம் விட்டு நகரும் கூத்துப் படலத்தை அடுத்து எத்தனை முறை என்றாலும் நான் சலிக்காமல் கேட்பதென்றால் அது மாமா வேலையை விட்ட கதைதான்
மாமாவின் நேர்மை எப்போதும் அங்கு இருக்கும் மற்ற களவாணிகளுக்கு இடைஞ்சலாகத்தான் இருக்கும். மாமா கையெழுத்துப் போட்டால் தான் செக் பாஸாகும். ஆனால் மாமா சரியாக எல்லா விசயமும் நடக்கிறதா, நடந்து முடிந்திருக்கிறதா என்றுப் பார்க்காமல் கையெழுத்துப் போடமாட்டார். அவர் குணம் ஆரம்பத்தில் இருந்து அப்படித்தான் என்பதால் அதற்கேற்றவாறு அவரை அலுவலகம் அனுசரித்துக் கொண்டிருந்தது.
புதிதாய் ஓர் உயர் அதிகாரி வந்து சேர்ந்தார். மாமாவை விட இளையவர் என்று சொல்கிறார்கள். அதுப் பற்றி சரியாகத் தெரியவில்லை. ஆனால் அரசியல்வாதி குடும்பத்தில் பெண்ணெடுத்த, செல்வாக்கான நபர் என்பதை அவர் வந்ததுமே அனைவருக்கும் தெரியப் படுத்தினார். அனைத்து ஒப்பந்தங்களும் அவரது மாமனார் கம்பெனிக்கே போகுமாறுக் கவனமாகப் பார்த்துக் கொண்டார்.
இப்படிப்பட்ட மனிதருக்கும் மாமாவிற்கும் எப்படி ஒத்துப் போகும்? எப்போது தன் அறைக்குள் வந்தாலும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக மாமாவைத் திட்டி அவமானப் படுத்துவதே அவருக்கு வழக்கமாக இருந்தது. இது மாமாவை வெறுப்பவர்களுக்கு ஆரம்பத்தில் மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தாலும் போகப்போக அவர்களுக்கும் இது சங்கடமானதாக இருந்தது. மாமா எந்தளவு நேர்மையோ அந்தளவு வேலையை சரியாக செய்யும் நபர். அதனால் ஒருக் கட்டத்திற்கு மேல் அனைவரும் அவருக்கு ஆதரவாக நின்றார்கள். முடிந்த வரை அவரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள் என்றும் சொல்லலாம்.
அப்படி ஒருமுறை தன் மாமனார் கம்பெனிக்கு, செக் வாங்க அதிகாரி அவசரப்பட, மாமா அதற்கு ஒத்துழைக்காமல் தன் நேர்மையை விடாமல் கடைபிடிக்க, அத்தனை நாள் தன் அறைக்குள் வைத்துத் திட்டிக் கொண்டிருந்த அந்த அதிகாரி, அன்று அலுவலக வராண்டாவில் வைத்து போவோர் வருவோர் எல்லாம் பார்க்குமாறு மாமாவை அவனே இவனே, அடா, புடாவென்று சகட்டுமேனிக்கு திட்டி இருக்கிறார்.
மாமாவிற்கு கண்ணெல்லாம் கலங்கி விட்டது. இன்றோடு உன் சீட்டைக் கிழிக்கறேன் பாரு என்று அதிகாரி சொல்லவும் அப்போது கூட கோபப்படாமல் மரியாதையாக “சரிங்க சார், செய்ங்க, ஆனா ஒன்னு, நீங்க நல்லா இருக்க மாட்டிங்க சார்” என்று குழந்தையைப் போல் கையை விரித்துக் காட்டி விட்டு, நடந்து வீட்டிற்கு வந்து விட்டார்.
அடுத்த நாள் அலுவலகமேக் கிளம்பி அந்த அதிகாரி வீட்டிற்கு மாலையுடன் செல்லும்படி ஆனது. ஆம், அலுவலகத்தில் இருந்து மாமாவை விரட்டிய அதிகாரியை, விடியற்காலை வந்த மாரடைப்பு உலகத்தை விட்டே துரத்தி இருந்தது. யாருமே அதிகாரி இறந்ததற்கு துக்கப் படவில்லை. ஆனால் அனைவருமே மாமாவிடம் இப்படி நடந்துக் கொண்டதால் தான், மாமா மனம் நொந்து சாபம் விட்டதால் தான் அவர் இறந்து விட்டதாகத் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
மாமா அந்த சாவிற்குப் போகவில்லை. அவருக்கு குற்ற உணார்ச்சி தாளவில்லை. அன்றே அவரும் வீஆர் எஸ் எழுதிக் கொடுத்து விட்டு வந்து விட்டார். அன்றில் இருந்து அவரது ஓய்வூதியம் தான் அவர் குடும்பத்திற்கு ஒரே வருமானம். ஆனால் மாமாவிற்கு எந்தக் குறையும் இல்லை. எப்போதும் போல் முடிந்தவரை அனைவருக்கும் உதவிக் கொண்டுதான் இருக்கிறார்.
எங்களை அரசு வேலைக்குப் படிக்கச் சொல்கையில் மாமா அவ்வபோது அரசு அலுவலகங்களுக்கு சென்று பார்த்து வரச் சொல்வார். எந்த வேலை வாங்க ஆசைப் படுகிறோமோ அந்தப் பதவியில் தற்போது இருக்கும் நபர்களின் நடவடிக்கைகளைக் கவனிக்கச் சொல்வார். அந்த இடத்தில் எங்களை வைத்து கற்பனை செய்துப் பார்க்கச் சொல்வார். தொடர்ச்சியாக தேர்வுக்கு தயாராகும் உத்வேகத்தை இது போன்ற செயல்கள் தரும் என்பார்.
நான் மாமா வேலைப் பார்த்த அலுவலகத்திற்குத்தான் சென்றுப் பார்ப்பேன். நான் எப்போது சென்றாலும் மாமாவைப் பற்றிதான் விசாரிப்பார்கள். எப்போதும் மாமாவின் நேர்மையும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத களவற்ற குணமும், சிக்கனமும் தான் பேசப்படும். அதுவும் எத்தனை முறையென்றாலும் சலிக்காமல் அவர் புகழ் பாடுவார்கள்.
எனக்கு அரசு வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்கும் ஆசையெல்லாம் இல்லை. ஆனால் மாமாவைப் போல் எப்போதும் என்னைப் பற்றி பெருமையாக அனைவரும் புகழ்பாடும் வண்ணம் நடந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டு. அந்த அதிகாரியைப் பற்றி நான் கேட்டால் கூட யாரும் அதிகம் சொல்வதில்லை. அம்மனிதரைப் பற்றிப் பேசக்கூட சலித்துக் கொள்கிறார்கள்.
வள்ளுவர் சும்மாவா சொல்லி இருக்கிறார்?
களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப் போகும். களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது என்று…?
அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:290
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு